அரபு நாடுகளில் வேலை இழக்கும் இந்தியர்களுக்கு மறுவாழ்வு - மத்திய அரசு யோசனை
அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வேலைபார்க்ககும் இந்தியத் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பல்வேறு தொழிற்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்களல் பலர் வேலையிழந்து தாயகம் திரும்புகையில், அவர்களின் மறுவாழ்வுக்காக, சிறப்பு நிதியம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையில் அங்கு நடைபெற்ற ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் பிரிவான, கட்டுமானத் தொழில்துறை மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துறையில், உள்ள ஏராளமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனேக இந்தியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடன் நெருக்கடிக்குள் துபாய் சிக்கியுள்ளதால் அங்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியும், தொழில் முடக்கமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும், 2,700 கோடி அமெரிக்க டாலர்களை, துபாயில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் மூலமான அந்நியச் செலாவாணியாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்திய மத்திய அரசு, இந்த மறுவாழ்வு உதவித் திட்டத்தை விரிவாக வகுத்து வருகிறது. இதன் மூலம், அரபு நாடுகளிலிருந்து வேலையை இழந்து தாயகம் திரும்பும் இந்தியர்களது வாழ்வினை மறுசீரமைக்க முடியும் என அரசு நம்புவதாக, வெளிநாடு வாழ் இந்தியர்களின் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







No comments:
Post a Comment